கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி ஒரு வழியாகத் தப்பிப் பிழைத்துள்ளது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில், நெதர்லாந்து அணிக்கு எதிராகப் படாதபாடு பட்டு, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு ஆல்-ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃபின் அதிரடி ஆட்டமும், நெதர்லாந்து வீரர் விட்ட ஒரு கேட்சும் தான் முக்கியக் காரணம்.
டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் 148 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வந்துள்ளது.

போட்டியின் பெரும்பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 98 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தான் வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்டத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
டாட் பால்கள் அதிகரித்தன, விக்கெட்டுகள் சரிந்தன. பாகிஸ்தானின் கையில் இருந்த வெற்றி, நெதர்லாந்து பக்கம் சென்றது. ஒரு நல்ல ஓவர் வீசினால் போதும், நெதர்லாந்து வெற்றி பெற்றுவிடும் என்ற சூழல் உருவானது.
ஆட்டத்தின் திருப்புமுனையாக 19வது ஓவர் அமைந்தது. அப்போது பாகிஸ்தான் வெற்றிபெற 11 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் இருந்த ஃபஹீம் அஷ்ரஃப், லோகன் வான் பீக் வீசிய பந்தை வானுயரத் தூக்கி அடித்தார். பந்து காற்றில் பறந்தபோது, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பும் காற்றில் பறந்தது போலவே இருந்தது.
ஆனால், அந்த எளிதான கேட்சை நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓ'டவுட் கோட்டை விட்டார். அந்தத் தருணம் குறித்து போட்டிக்குப் பிறகு பேசிய ஃபஹீம் அஷ்ரஃப், சிரித்துக்கொண்டே ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.
"அந்த நேரத்தில் என் நாக்கு மட்டுமல்ல, என் உடம்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அந்தக் கேட்சை அவர் விட வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்தது" என்று அவர் கூறினார். அந்த நிலையில் தான் பாகிஸ்தான் அப்போது இருந்தது.
கேட்ச் டிராப் ஆன பிறகு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை ஃபஹீம் அஷ்ரஃப் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு சிக்ஸர் அடித்திருந்த அவர், கேட்ச் டிராப்புக்குப் பிறகு மேலும் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஃபஹீம் அஷ்ரஃப் 11 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தச் சரிவு குறித்துப் பேசிய அவர், "அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்குச் சற்று கடினமாகிவிட்டது. அந்த நேரத்தில் ஒரு 15-20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் கூட, போட்டி இவ்வளவு கடைசி வரை சென்றிருக்காது" என்று ஒப்புக்கொண்டார்.
ஒரு சிறிய அணியான நெதர்லாந்தை வீழ்த்துவதற்கே பாகிஸ்தான் அணி இவ்வளவு தடுமாறியது, அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் குறித்துப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த கேட்ச்சை நெதர்லாந்து பிடித்திருந்தால் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கும்.