ஹைதராபாத் : பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் சவுது ஷகீல், முகமது ரிஸ்வான் ஆகிய இருவர் அடித்த அரைசதம் காரணமாக பாகிஸ்தான் அணி இந்த ஸ்கோரை எடுக்க முடிந்தது.

2023 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் மூன்று விக்கெட்களை 38 ரன்களுக்கு இழந்தது.
அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மிக மோசமாக 18 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துவக்க வீரர்கள் ஜமான் 12, இமாம் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது ரிஸ்வான், சவுது ஷகீல் கூட்டணி அமைத்து ரன் சேர்க்கத் துவங்கினர்.
ஷகீல் அதிரடி ஆட்டம் ஆடி 52 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஸ்வான் நிதான ஆட்டம் ஆடி 75 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து இப்திகார் அஹமத் 9 ரன்களில் வெளியேறினார்.
பின் நவாஸ் 39, ஷதாப் கான் 32 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் கடைசி வரிசை வீரர்களும் ஆட்டமிழந்தனர். 49 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது.
இந்த ஆடுகளம் 300 ரன்களுக்கும் மேல் எடுக்க சாதகமானது என்றாலும் பாகிஸ்தான் அணி 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நெதர்லாந்து அணி பெரிய அனுபவம் இல்லாத அணி என்றாலும் பாகிஸ்தான் அணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தியது.