கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள முதல் போட்டிக்கான ஆடும் லெவன் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த இரண்டு அணிகளிலும் சில வீரர்கள் காயத்தில் சிக்கி இருந்தனர். அதில் இருந்து மீண்டு வந்தது யார்? இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என பார்க்கலாம்.

வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் முன்பு காயத்தில் சிக்கி இருந்தார். தற்போது அவர் காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டதால், அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் உத்தேச ஆடும் லெவன் பின்வருமாறு:
ஃபகார் ஜமான், பாபர் அசாம், கம்ரான் குலாம்/சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆகா, தய்யப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப்
நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் முகத்தில் காயம் ஏற்பட்டு விலகியிருந்த ரச்சின் ரவீந்திரா அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.
நியூசிலாந்தின் உத்தேச ஆடும் லெவன் பின்வருமாறு:
வில் யங்/ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, நாதன் ஸ்மித்/ஜேக்கப் டஃபி, வில் ஓ'ரூர்க்
இரண்டு அணிகளும் சம பலத்துடன் காணப்படுகின்றன. சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதற்கு இந்தப் போட்டியில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இந்த போட்டி கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியுடன் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி விளையாட உள்ள முதல் போட்டி பிப்ரவரி 20 அன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் அந்த தொடரில் மோத உள்ளன.