கிறிஸ்ட்சர்ச் : பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்த அணி ஏற்கனவே மூன்றுக்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க பாபர் அசாம் 19 ரன்களிலும் பக்கர் சமான் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, தொடக்க வீரராக களம் இறங்கிய ரிஸ்வான் மட்டும் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் ஸ்கோரை உயர்த்தினார். 63 பந்துகளை எதிர்கொண்ட அவர் 90 ரன்களை குவித்தார்.
இதில் ஆறு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் பாகிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பின் ஆலன் எட்டு ரன்களிலும், டிம் செப்ர்ட் டக் அவுட் ஆகியும் , வில் யங் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து சிஎஸ்கேவால் புதிதாக வாங்கப்பட்ட 14 கோடி ரூபாய் வீரர் டாரல் மிட்செல் மற்றும் கிளன் பிலிப் ஆகியோர் களத்திற்கு வந்தனர். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சை டாரல் மிச்செல் மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.இதேபோன்று கிளன் பிலிப்ஸ்ம் தன்னுடைய அதிரடியை காட்டினார். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்திற்கு உயர்ந்தது.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். அபாரமாக விளையாடிய டாரல் மிட்செல் 44 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். இதில் ஏழு பவுண்டர்களும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். கிளன் பிலிப்ஸ் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும்.இதன் மூலம் 18 புள்ளி ஒரு ஓவரில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாஹீன் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.