கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியுடன் நியூசிலாந்து அணி விளையாடியது. இந்த போட்டி நடைபெற்ற கராச்சி மைதானத்தில் 30,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கலாம்.
ஆனால், இந்தப் போட்டியைப் பார்க்க 15,000 ரசிகர்கள் கூட நேரில் வந்திருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு போட்டி தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மைதானம் காலியாக காட்சி அளித்தது. மைதானத்தில் ஆங்காங்கே ரசிகர்கள் அமர்ந்து இருந்தனர். இதனை பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.

சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தும் பாகிஸ்தான் இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு இருக்கலாம் எனவும், மைதானத்தில் பல விஷயங்கள் புதிதாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், பல அடிப்படை வசதிகள் கூட ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை என சிலர் குறை கூறி உள்ளனர்.
பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடரை நடத்தக்கூடாது என சிலர் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள மைதானங்களில், குறிப்பாக கராச்சி மைதானத்தில் எப்போதும் ரசிகர்கள் குறைந்த அளவிலேயே வருவதாக விமர்சனம் உள்ளது. இந்த நிலையில், எதற்காக முதல் போட்டியை கராச்சி மைதானத்தில் நடத்துகிறார்கள்? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும், இதே போன்ற விமர்சனங்கள் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் தொடக்கப் போட்டியிலும் நடந்தது. அப்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் போட்டியில் விளையாடின. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட அகமதாபாத் மைதானத்தில் அந்தப் போட்டி நடைபெற்றது. அந்த முதல் போட்டிக்கு பாதி அளவே ரசிகர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர்.
அதேபோல, இந்திய அணி ஆடிய சில போட்டிகளுக்கும் மதிய நேரத்தில் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வரவில்லை. மாலை நேரங்களிலேயே ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்தில் குவிந்தனர். அதேபோலவே, பாகிஸ்தானிலும் மாலை நேரத்தில் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்களா? என பொறுத்திருந்து பார்க்கலாம். இது குறித்து உங்கள் கருத்துக்களைக் கமெண்டில் பதிவிடலாம்.