கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளின் முதல் போட்டியிலேயே ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியது. அதைப் பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முக்கிய பாகிஸ்தான் வீரருக்கு காயம் ஏற்பட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூசிலாந்தின் துவக்க வீரர்கள் வில் யங் மற்றும் டெவான் கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி வீசினார்.

அவர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை வில் யங் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்தார். பந்து பவுண்டரியை நோக்கி வேகமாகச் சென்றது. அதைத் தடுப்பதற்காக ஃபாகர் ஜமான் ஓடினார். அவர் பந்தைத் தடுத்தபோது கீழே விழுந்து அவரது முட்டி மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் அப்படியே இடுப்பை பிடித்துக் கொண்டு வலியில் துடித்தபடி அமர்ந்து விட்டார்.
பின்னர் அவரை கைத்தாங்கலாக மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். அவருக்குப் பதிலாக கம்ரான் குலாம் ஃபீல்டிங் செய்ய உள்ளே வந்தார். சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான தொடரின் முதல் போட்டியின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி ஃபாகர் ஜமான் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வாரா? இனி தொடர்ந்து அவரால் இந்தத் தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. ஃபாகர் ஜமான் ஒரு முக்கியமான வீரர், மேலும் அவர் நல்ல ஃபார்மில் இருந்தார். அவரது காயம் பாகிஸ்தான் அணியின் மன உறுதியைக் குலைக்கும்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸில் தோல்வி அடைந்தது பின்னடைவாகவே பார்க்கப்படும் நிலையில், அந்த அணி பேட்டிங் செய்து அதிக ஸ்கோர் எடுக்க முனைந்துள்ளது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அவர்கள் அதிக ரன்கள் குவிக்க முயற்சிப்பார்கள். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.