கராச்சி: பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 76 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். சல்மான் ஆகா 65 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். தைய்யப் தாஹிர் 38 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ'ரூர்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் டேரில் மிட்செல் மற்றும் டாம் லாதம் அரை சதங்களை அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். நியூசிலாந்தின் துவக்க வீரர் டெவோன் கான்வே 48 ரன்களும் கேன் வில்லியம்சன் 34 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து டேரில் மிட்செல் 57 ரன்களும், டாம் லாதம் 56 ரன்களும் எடுத்தனர். கிளென் பிலிப்ஸ் ஆட்டம் மறக்காமல் 20 ரன்கள் எடுத்து இருந்தார். இதை அடுத்து நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை 45.2 ஓவரில் எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்தத் தொடரில் மற்றொரு அணியான தென்னாப்பிரிக்கா இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக இருந்த இந்த தொடரில், நியூசிலாந்து அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி தான் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.