கராச்சி: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி செய்த தவறு ஒன்றிற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்து உள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஒருவர் காயம் காரணமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து அடி மேல் அடி வாங்கி வருகிறது பாகிஸ்தான்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 அன்று தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால், போட்டி நடுவர் பாகிஸ்தானுக்கு 5 சதவீதம் அபராதம் விதித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அனைவரது சம்பளத்தில் இருந்தும் ஐந்து சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 320 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால் ஓவர்களை வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து பாகிஸ்தான் அணி ஆமை வேகத்தில் பேட்டிங் செய்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் குரூப் ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. தற்போது அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது.
அடுத்ததாக பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டி பிப்ரவரி 23 அன்று துபாயில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். இதனால் ஆட்டத்தின் வேகம் குறைந்தது. பாகிஸ்தான் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இந்த தாமதமே அபராதத்திற்கு முக்கிய காரணம். தோல்வியும் அபராதமும் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் ஃபகர் ஜமான் காயத்தில் சிக்கி இருக்கிறார். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக இமாம் அலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.