கொழும்பு: 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஒரு பந்து கூட வீச முடியாமல் போன நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பாகிஸ்தான் அணி ஒரு மாற்றத்தைச் செய்திருந்தது, குவாஜா நஃபாய்க்குப் பதிலாக ஃபகர் ஸமான் அணியில் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியது.

வயிற்றுப் பிரச்சனை காரணமாக கடந்த கனடா போட்டிக்கு வராத கேப்டன் மிட்செல் சான்ட்னர் மீண்டும் அணிக்குத் திரும்பினார். லோக்கி ஃபெர்குசன் மற்றும் இஷ் சோதி ஆகியோரும் ஆடும் லெவனில் இடம்பிடித்தனர்.டாஸ் முடிந்த உடனேயே மழை தூற ஆரம்பித்தது. தொடர்ச்சியான மழையால் ஆட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும்.
ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியையாவது நடத்தலாம் என்ற நடுவர்கள் நினைத்த போதிலும், அதற்கு வானிலை கருணை காட்டவில்லை. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதியடைந்த இரு அணிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ஒரு வேலை, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஏதேனும் ஒரு அணி 3 போட்டிகளில் வென்றால், அது மற்ற அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் எஞ்சிய 2 போட்டிகளில் கண்டிப்பாக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இந்த முடிவு அரை இறுதி வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்த சூப்பர் 8 குழுவில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டியில் வெற்றி பெறும் அணி குழு 2 இல் முதலிடம் பெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி 22, 2026 அன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதலில் பல்லேகலேயில் இலங்கை இங்கிலாந்தை எதிர்கொள்ளும். இந்த போட்டி மதியம் 3 மணிக்குத் தொடங்கும், இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.