சென்னை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா 9 ரன்களிலும், இமாம் உல் ஹக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து ரிஸ்வானுடன் இணைந்து பாகிஸ்தான் அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் கேப்டன் பாபர் அசாம் ஈடுபட்டார். ஆனால் ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணியை மீட்கும் பொறுப்பு பாபர் அசாம் தலையில் விழுந்தது. தொடர்ந்து வந்த இஃப்திகார் அஹ்மத் 21 ரன்களில் வெளியேற, விக்கெட்டை காப்பாற்றும் பொறுப்பும் பாபர் அசாமிடம் கொடுக்கப்பட்டது.
இதனை புரிந்து சிறப்பாக ஆடிய பாபர் அசாம் அரைசதத்தை எட்டினார். இந்த உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். ஏற்கனவே இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசி இருந்தார். இதன் மூலம் பாபர் அசாம் ஃபார்முக்கு வந்ததாக பார்க்கப்பட்ட நிலையில், 50 ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் கிரிக்கெட் ஜாம்பவான் கவுதம் கம்பீர் பேசுகையில், உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் ஆட்டம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கவுதம் கம்பீர் புகழ்ந்த நேரம், அவர் பேட்டிங்கில் ஃபார்மை இழந்து தடுமாறினார். அதிலும் உலகக்கோப்பை தொடரின் முதல் இரு போட்டிகளில் வெறும் 15 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.
தற்போது இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப பாபர் அசாம் பேட்டிங் செய்ய தொடங்கியுள்ளார். இருப்பினும் பாபர் அசாமிடம் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், ஃபினிஷிங் சரியில்லை என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அரைசதங்களை விளாசும் பாபர் அசாமால், விராட் கோலியை போல் சதங்களாக மாற்ற தெரியவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.