சென்னை: பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நவாஸை கேப்டன் பாபர் அசாம் களத்திலேயே திட்டிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலமாக உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து புதிய சாதனைக்கு சொந்தமாகிள்ளது. இந்தப் போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 8 ரன்களும், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு ஒரேயொரு விக்கெட்டும் தேவையாக இருந்தது. அப்போது முகமது வாசிம் ஜூனியர் தனது கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது.
இத்துடன் வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் தங்களின் 10 ஓவர்களை வீசி முடித்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி ஸ்பின்னர்களிடம் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. இதனை முன்பே கணித்த தென்னாப்பிரிக்கா வீரர் மஹாராஜ், ஸ்பின்னர்கள் பந்துவீசுவதற்காக காத்திருந்தார். அப்போது பாபர் அசாம், இடதுகை ஸ்பின்னரான முகமது நவாஸை அழைத்தார்.
ஏனென்றால் பார்ட் டைமரான இஃப்திகார் அஹ்மத் மற்றும் இளம் வீரரான உசாமா மிர் ஆகியோரை ஒப்பிடும் போது முகமது நவாஸிடம் கொஞ்சம் கூடுதல் துல்லியம் இருக்கும். அதேபோல் ஸ்ட்ரைக்கில் ஷம்சி இருந்ததால், அவரை ரன்கள் சேர்க்க விடாமல் விக்கெட் வீழ்த்தவும் வாய்ப்புள்ளது என்று சிந்தித்து கேப்டன் பாபர் அசாம், முகமது நவாஸ் கையில் பந்தை கொடுத்தார்.
ஆனால் முதல் பந்திலேயே ஷம்சி-க்கு சிங்கிள் ரன்னை கொடுத்த முகமது நவாஸ், மஹாராஜ்-க்கு வீசிய 2வது பந்து பிளாட்டாக வீசப்பட்டு லெக் திசையில் திரும்ப, எளிதாக பவுண்டரி அடிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பாபர் அசாம், உடனடியாக களத்திலேயே முகமது நவாஸை ஆவேசமாக திட்டினார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.