சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற 271 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 26வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஹாட்ரிக் தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி களமிறங்குவதால், கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா - இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அப்துல்லா 9 ரன்களிலும், இமாம் உல் ஹக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் கூட்டணி இணைந்தது. 3வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்த இஃப்திகார் அஹ்மத், பாபர் அசாமுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தனது பாணியில் பவுண்டரியை விளாசினார். இதனால் 21 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 129 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. ஆனால் அணியை மீட்டெடுக்கும் பொறுப்புடன் பாபர் அசாம் அரைசதம் அடித்து அசத்தினார்.
ஆனால் யார் கண் பட்டதோ, அடுத்த பந்திலேயே பாபர் அசாமும் ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த ஷகீல் - ஷதாப் கான் கூட்டணி ரன்கள் சேர்க்க சிறிது நேரம் போராடியது. இதன் காரணமாக 6வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 84 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதனால் 35 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 190 ரன்களை எட்டியது. இதனால் பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் அதிரடியாக ஆடினார்.

சிறப்பாக ஆடிய அவர் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து அரைசதம் விளாசிய ஷகீல் 52 ரன்களில் வெளியேரினார். பின்னர் வந்த வீரர்களில் முகமது நவாஸ் மட்டும் 24 ரன்கள் சேர்க்க, கடைசியில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கடைசி 31 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பின்னடைவாக மாறியது. அதேபோல் முகமது வாசிம் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்ஸி 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியை 270 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணி சுருட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணி 3 ஸ்பின்னர்களுடன் வந்திருப்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.