கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இது டி20 தொடரில் பாகிஸ்தான் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் தற்போது ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றியை கண்டு இருக்றிகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் நேற்று களம் கண்டது.

கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சையும் அயூப் 25 ரன்கள் ஆட்டம் இழக்க, அப்துல்லா ஷபிக் டம் அவுட் ஆனார். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபர் அசாம், ரிஸ்வான் அபாரமாக விளையாடி இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.
பாபர் அசாம் 95 பந்துகளின் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரிஸ்வான் 80 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சல்மான் ஆகா 33 ரன்கள், கம்ரான் குலாம் 63 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தென் ஆப்பிரிக்கா அணியில் கிளாசென் மட்டும் தனியாளாக நின்று 74 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் தென்னாப்பிரிக்கா அணி 43.1 ஓவரில் 248 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் ஆப்ரிடி நான்கு விக்கெட்டுகளும் நசீம் சார் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்த போட்டியில் அரை சதம் விளாசியதன் மூலம் சேனா நாடுகளில் ( தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் தோனியை பாபர் அசாம் முந்தியிருக்கிறார். தோனி 38 அரை சதம் சேனா நாடுகளில் அடித்துள்ள நிலையில், பாபர் அசாம் அவரை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக பாபர் அசாம் நிறைவு செய்கிறார். இதுபோன்று பாகிஸ்தானின் கேப்டன் முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்ற முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.