ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 18 ஆண்டுகளில் பாகிஸ்தான் மண்ணில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டியில் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்களையும், சக்கீல் 66 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 57 ரன்களையும் எடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முத்துசாமி மற்றும் ரபாடாவின் அதிரடியான ஆட்டத்தால் 404 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய முத்துசாமி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 71 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா வீரர் ஹார்மரின் பவுலிங்கில் சிக்கி சின்னாபின்னமானது.
பாபர் அசாம் மட்டும் 50 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் யாரும் 30 ரன்களை தாண்டவில்லை. இதனால் வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானது. சிறப்பாக பவுலிங் செய்த ஹார்மர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து எளிதாக சேஸிங் செய்தது. இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகளும் கேப்டன்களும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர். இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் மண்ணில் 18 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் வெல்வதற்கான புதிய வியூகத்தை கண்டறிந்துவிட்டதாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தோல்வியின் பாதைக்கு திரும்பி இருக்கிறது. இதனால் சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் வீரர்கள் அவமானப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.