ராவல்பிண்டி: 119 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்காக நம்பர் 11 வீரராக களமிறங்கிய அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை ககிசோ ரபாடா படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நம்பர் 11 பேட்ஸ்மேனாக வந்த ரபாடா, 61 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அசத்தி இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், தற்போது 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 333 ரன்கள் எடுத்தது.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 306 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது செனுரன் முத்துசாமி - ரபாடா கூட்டணி இணைந்தது. கடைசி பேட்ஸ்மேனாக ரபாடா வந்ததால், பாகிஸ்தான் வீரர்கள் உற்சாகமுடன் இருந்தனர். ஆனால் அடுத்த 10 ஓவர்களில் ரபாடா நெருப்பை கக்கிக் கொண்டே இருந்தார் என்று சொல்லலாம்.
திரும்பிய பக்கமெல்லாம் சிக்சரும், பவுண்டரியுமாய் பறந்து கொண்டே இருந்தது. சிறப்பாக ஆடிய ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரைசதத்தை விளாசி தள்ளினார். மறுபக்கம் முத்துசாமியின் அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் கண்களை மூடி திறக்கும் நேரத்தில் 400 ரன்களை கடந்தது.
பாகிஸ்தான் அணி முன்னிலையுடன் பேட்டிங்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ரபாடாவின் அதிரடி, ஆட்டத்தை தலைகீழாக திருப்பியது. இறுதியாக 61 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரபாடா 119 ஆண்டு கால சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
119 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக நம்பர் 11 பேட்ஸ்மேனாக வந்து அதிக ரன்களை ரபாடா விளாசி சாதனை படைத்துள்ளார். அதேபோல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் 11 பேட்ஸ்மேனாக ரபாடா அடித்துள்ள 71 ரன்கள், டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்டன் அகர், டினோ பெஸ்ட், ஆண்டர்சன், ஜாகீர் கான் ஆகியோருக்கு ரபாடா இடம்பிடித்துள்ளார்.