லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட்டின் 'கிங்' என்று வர்ணிக்கப்படும் பாபர் அசாம், லாகூர் கடாபி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பேட்டிங் செய்ய வந்தபோது ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. ஆசிய கோப்பை அணியில் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக ஆடுவதால் பெரிய ஹீரோ போல ஆடுகளத்துக்குள் நுழைந்தார் "கிங்" பாபர் அசாம். ஆனால், அந்த "பில்டப்" ஆரவாரங்கள் அடங்குவதற்குள், பாபர் அசாம் தலையைக் குனிந்தபடி பெவிலியன் திரும்பியது, ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத்தையும் நொறுக்கும் சோகமாக அமைந்தது.
பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக படுமோசமான ஃபார்மில் இருக்கிறார். மேலும், கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக மட்டுமே ரன் குவிக்கிறார் என்ற புகார்கள் அதிகரித்த நிலையில் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டார். அதன் பின் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாபர் அசாம் களமிறங்கியபோது, ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். டி20 அணியில் நீக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் வரவேற்பு சற்றும் குறையவில்லை.

ஆனால், அவர்களின் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை சிதைத்த பாபர், 48 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ஏதோ ஒரு போட்டியில் ஏற்பட்ட சறுக்கல் அல்ல; இது அவரது படுமோசமான ஃபார்மின் தொடர்கதை. இந்த ஆட்டமிழப்பின் மூலம், சொந்த மண்ணில் கடந்த 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காத சோகமான சாதனையை அவர் தொடர்ந்துள்ளார்.
2020-களின் தொடக்கத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் பேசப்பட்ட பாபர் அசாம், தற்போது வீழ்ச்சிப் பாதையில் இருக்கிறார். அது அவரது புள்ளிவிவரங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. கடைசியாக அவர் சொந்த மண்ணில் அரைசதம் அடித்தது, டிசம்பர் 2022-ல் நியூசிலாந்துக்கு எதிராக. அதன்பிறகு, 13 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட இல்லை.
2023-ஆம் ஆண்டிலிருந்து, சொந்த மண்ணில் அவரது டெஸ்ட் சராசரி வெறும் 16.76 மட்டுமே. இது, இதே காலகட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன்களில் மிகவும் மோசமான சராசரியாகும். சர்வதேச கிரிக்கெட்டில், பாபர் சதம் அடித்து 73 இன்னிங்ஸ்கள் கடந்துவிட்டன.
விராட் கோலியும் 2019 முதல் 2022 வரை சதம் அடிக்காமல் ஒரு மோசமான காலகட்டத்தைச் சந்தித்தார். ஆனால், அந்த காலகட்டத்திலும் கோலி முக்கியமான அரைசதங்களை அடித்து, அணிக்கு வெற்றிகளைத் தேடித் தந்தார்.
ஆனால், பாபரின் நிலைமை அப்படி இல்லை. அவர் ரன் குவிக்கத் தவறுவதோடு, அணியின் தோல்விகளுக்கும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறார். இதனால், டி20 மற்றும் ஒருநாள் அணியில் தனது இடத்தை இழந்த அவர், தற்போது டெஸ்ட் அணியிலும் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத தூணாக இருந்த பாபர் அசாம், தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகவும் கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் பாபர் அசாம் ரன் குவிக்கவில்லை என்றால் அவர் டெஸ்ட் அணியிலும் தனது இடத்தை இழக்க நேரிடும்.