லாகூர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் பாகிஸ்தான் அணியின் இமாமுல் ஹக் மற்றும் சல்மான் ஆகா தலா 93 ரன்கள் சேர்க்க கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் எடுத்தார்.

இதைப் போன்று முன்னாள் கேப்டன் முகமது ரிஸ்வான் 75 ரன்கள் சேர்க்க பாபர் அசாம் 23 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் நடுவரிசையில் விளையாடிய டோனி டிஷோர்சி மட்டும் சதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ரியான் ரிக்கல்ட்டன் 71 ரன்கள் எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 269 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் நோமன் அலி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 109 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
இதில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 41 ரன்களும் பாபர் அசாம், 42 ரன்களும் எடுக்க சவுத் சகில் 38 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சு தரப்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செனுரான் முத்துசாமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதனை அடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. இதில் ரியான் ரிக்கல்டன் தொடக்க வீரராக விளையாடி 45 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் ஏய்டன் மார்க்கரம் மூன்று ரன்களிலும், வியான் முல்டர் டக் அவுட்டாகியும் வெளியேறினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த டோனி டிஸோர்சி 16 ரன்களில் வெளியேறினார்.
எனினும் சிஎஸ்கே வீரர் டிவால்ட் பிரவீஸ் நடுவரிசையில் 54 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய நோமன் அலி இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட்டை கைப்பற்றினார். ஷாகின் ஷா ஆப்ரிடி இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட அந்த தொடரில் பாகிஸ்தான் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 10 போட்டிகள் ஆக தோல்வியை தழுவாத நிலையில் தற்போது அந்த அணியின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.