மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 38 வயது வீரரான ஆசிப் அப்ரிடி என்ற சுழற் பந்துவீச்சாளர் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்ரார் அகமதுக்கு பதிலாக ஆசிஃப் அப்ரிடி, இந்த டெஸ்டில் விளையாடினார்.

இதன் மூலம் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகமான இரண்டாவது வயதான வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 1955 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 47 வயதான மீரான் பக்ஷ் என்ற வீரர் பாகிஸ்தான் அணிக்காக முதல் போட்டியில் விளையாடியதே தற்போது வரை சாதனையாக தொடர்கிறது.
இந்த நிலையில் ஆசிஃப் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட்டால் தடை செய்யப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான புகாரை முறைப்படி தெரிவிக்கவில்லை எனக்கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2023 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டு கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் அந்த தடையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென்று நீக்கியது. இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார். இதுவரை 57 முதல் தர கிரிக்கெட் போட்டி விளையாடியுள்ள ஆசிப் அப்ரிடி, 198 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி 25 என்று அளவில் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 57 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 87 ரன்களும், சவுத் சகில் 42 ரன்களும் எடுத்துள்ளனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 16 ரன்கள் எடுத்திருந்தபோது டோனி டி சோர்சியின் அபார கேட்ச் மூலம் ஆட்டம் இழந்தார். தற்போது 91 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி மட்டும்தான் வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.