லாகூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் தரக்குறைவாக நடந்து கொண்ட இரண்டு சம்பவங்கள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் அமைப்பு தண்டனை வழங்கி இருக்கிறது. அந்த மூன்று வீரர்களை தடை செய்ய வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்த நிலையில், அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் மோசமான செயல்களில் ஈடுபட்டனர்.

28-வது ஓவரின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே ரன் ஓடிய போது குறுக்கில் சென்றார். அப்போது இருவரும் மோதிக்கொண்டனர். அதனால் வாக்குவாதம் எழுந்தது. ஷாஹீன் ஷா வேண்டுமென்றே அப்படி செய்தார் என்பது வீடியோ காட்சிகள் மூலம் தெளிவாகவே தெரிந்தது. இதை அடுத்து அவருக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதமும் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டு உள்ளது.
அடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோர் மற்றொரு மோசமான செயலில் ஈடுபட்டனர். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஆட்டம் இழந்த போது அவரது முகத்துக்கு நேராக வந்து சத்தம் போட்டு ஆக்ரோஷமாக கொண்டாடினர்.
அவர்களை சக பாகிஸ்தான் வீரர்கள் தடுத்து இருக்கவில்லை என்றால் டெம்பா பவுமா மீது மோதி இருக்கவும் கூட வாய்ப்பு இருந்தது. எனினும் அதுபோன்ற சம்பவம் நொடிப் பொழுதில் தடுக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோருக்கு போட்டி சம்பளத்தில் பத்து சதவீதம் அபராதமாக விதித்து இருக்கிறது. இவர்களுக்கும் ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் மூவரும் முதல்நிலை விதிமீறல் செய்ததாக சர்வதேச கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.
முதல்நிலை விதிமீறலுக்கு ஒரு டீமெரிட் புள்ளி மட்டுமே வழங்கப்படும். அதனால், இவர்கள் தடையில் இருந்து தப்பி உள்ளனர். ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு டிமெரிட் புள்ளிகளை பெற்றால் அவருக்கு இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் முதலில் பேட்டிங் செய்து தென்னாப்பிரிக்கா அணி 352 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி அந்த இலக்கை சேசிங் செய்து 49 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. முகமது ரிஸ்வான் 122 ரன்களும், சல்மான் ஆகா 134 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.