கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முதல்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில், பாகிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவின் பந்துவீச்சு, தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், பந்துகள் மீதமிருந்த அடிப்படையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது மிகப்பெரிய வெற்றியையும் பாகிஸ்தான் பதிவு செய்தது.

முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. அதனால் ஃபைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. இந்தப் போட்டியில் அப்ரார் அகமது, தனது 10 ஓவர்களில் வெறும் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்க அணியைச் வீழ்த்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு, குவின்டன் டி காக் மற்றும் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஜோடி 72 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அளித்தது. ஆனால், இந்த ஜோடி பிரிந்ததும், ஆட்டத்தின் போக்கு தலைகீழானது.
முதல் விக்கெட் வீழ்ந்த பிறகு, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டுப் போலச் சரிந்தனர். சல்மான் அகா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, அதன் பிறகு அப்ரார் அகமது தனது சுழல் வலையைப் பின்னத் தொடங்கினார்.
அவர் ரூபின் ஹெர்மன், டோனோவன் ஃபெரேரா, கார்பின் போஷ் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி 143 ரன்களுக்குள் சுருண்டது. ஷஹீன் அஃப்ரிடி மற்றும் முகமது நவாஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தனர்.
144 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், ஃபகார் ஜமான் விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமல் இழந்தாலும், சவாலை எளிதாகச் சந்தித்தது. தொடக்க வீரர் சயிம் அயூப், தொடர்ச்சியாகத் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்து, 77 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபர் ஆசம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதியில், முகமது ரிஸ்வான் (32*) மற்றும் சல்மான் அகா (5*) ஆகியோர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
சொந்த மண்ணில் முதல் வெற்றி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகப் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும்.
மோசமான சரிவு: தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 56 ரன்களுக்குள் இழந்தது. இது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அவர்களின் ஆறாவது மோசமான சரிவாகும்.
குறைந்தபட்ச ஸ்கோர்: 50+ ரன்கள் தொடக்கத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா பதிவு செய்த இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும் (143). மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் பதிவு செய்த இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரும் இதுவே.