லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, தனது வாயால் வம்பில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று, பாபர் அசாம் குறித்து "டிராமா பண்ணுவான்" என்று சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளான அவர், இன்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலியின் சன்கிளாஸை கிண்டலடித்து மீண்டும் ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆட்டத்தின் 25-வது ஓவரை வீசுவதற்காகச் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், வர்ணனையில் இருந்த ரமீஸ் ராஜா, சற்றும் சம்பந்தமில்லாமல், நோமன் அலியின் சன்கிளாஸ் குறித்து ஒரு விசித்திரமான கருத்தைக் கூறினார்.
"நோமன் அலி ஒரு விசித்திரமான கண்ணாடியை அணிந்திருக்கிறார். பார்ப்பதற்கு வெல்டிங் செய்யும்போது பயன்படுத்தும் கண்ணாடி போல இருக்கிறது" என்று ரமீஸ் ராஜா கிண்டலாக கூறினார். அவரது இந்தக் கருத்து, பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வீரரின் ஆட்டத்திறனைப் பற்றிப் பேசாமல், அவரது தோற்றத்தைக் கிண்டலடிப்பது விளையாட்டு உணர்விற்கு எதிரானது என்றும், இது மிகவும் அவமானகரமானது என்றும் பலரும் சமூக வலைதளங்களில் ரமீஸ் ராஜாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

போட்டியின் முதல் நாளில், பாபர் அசாம் ஒரு டி.ஆர்.எஸ் முறையீட்டிற்குச் சென்றபோது, ரமீஸ் ராஜா, "இவன் அவுட்தான், இப்ப டிராமா பண்ணுவான்" என்று பேசிய சர்ச்சை அடங்குவதற்குள், இன்று நோமன் அலி குறித்து அவர் பேசியிருப்பது, அவரது வர்ணனைத் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த அவர், இப்படி பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எதிராகவே தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என அந்நாட்டு ரசிகர்கள் அவரை கண்டித்து வருகின்றனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. குறிப்பாக, ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்தது.
இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர், ரமீஸ் ராஜாவால் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட அதே நோமன் அலிதான். அவர் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தான் அணியின் கையை ஓங்கச் செய்துள்ளார். ஒருபுறம் வர்ணனையில் ரமீஸ் ராஜா சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், மறுபுறம் களத்தில் நோமன் அலி தனது பந்துவீச்சால் பதிலடி கொடுத்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறார்.