லாகூர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் நான்கு பேர் அரை சதம் அடித்தனர். இமாம் உல் ஹக் மற்றும் சல்மான் ஆகா தலா 93 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து தென்னாபிரிக்க அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

கேப்டன் மார்க்கரம் 20 ரன்கள் ஆட்டம் இழக்க, ரியான் ரிக்கல்டன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 137 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். இதே போன்று வியான் முல்டர் 17 ரன்களில் ஆட்டம் இழக்க டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். எனினும் நடுவரிசையில் விளையாடிய டோனி டி சொர்ஸி நிதானமாக விளையாடி 140 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
அவருக்கு தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சேனூரான் முத்துசாமி 6 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 216-ரன்கள் எடுத்திருக்கிறது. 39 வயதான பாகிஸ்தான் அணி வீரர் நோமன் அலி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 162 ரன்கள் பின் தங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்கா கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் முதலில் பாகிஸ்தான் அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற வாய்ப்பு உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் அந்த அணி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனால் இழந்த மானத்தை மீட்க வேண்டும் என்றால் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடியில் பாகிஸ்தான் அணி உள்ளது.