ராவல்பிண்டி: பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அப்ரிடி தனது 38வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 76 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இவரது அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
பொதுவாக, கிரிக்கெட்டில் 38 வயதில் வீரர்கள் ஓய்வை அறிவிக்கும் காலகட்டத்தில், பாகிஸ்தானின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆசிஃப் அப்ரிடிக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், தன் மீதான நம்பிக்கையை முதல் போட்டியிலேயே நிரூபித்து, விமர்சனங்களுக்கு தனது பந்துவீச்சால் பதிலடி கொடுத்துள்ளார்.

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் 76-வது ஓவரில், சைமன் ஹார்மரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஆசிஃப் அப்ரிடி தனது ஐந்தாவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்தார்.
இன்று (அக்டோபர் 22, 2025) தனது 38 வயது 301-வது நாளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆசிஃப் அப்ரிடி. இதற்கு முன்பு, 1949-ம் ஆண்டு நியூசிலாந்தின் ஃபென் கிரெஸ்வெல், தனது 34 வயது 146-வது நாளில் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது, 76 ஆண்டுகள் பழமையான அந்தச் சாதனையை ஆசிஃப் அப்ரிடி தகர்த்தெறிந்துள்ளார்.
இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. ராவல்பிண்டி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்த அணி நிர்வாகம், வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு பதிலாக, ஆசிஃப் அப்ரிடிக்கு வாய்ப்பளித்தது. இந்த வியூகம் தற்போது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, கேப்டன் ஷான் மசூதின் பொறுப்பான ஆட்டத்தால் (87 ரன்கள்) 333 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராடி 76 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இறுதியில் செனூரன் முத்துசாமி 89 ரன்களும், காகிசோ ரபாடா 71 ரன்களும் குவித்தனர். தென்னாப்பிரிக்கா 404 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது.