கொழும்பு : பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான மோசமான தோல்வியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பது இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டிக்கு முன் வெட்ட வெளிச்சமானது.
அந்தப் போட்டிக்கு முன்னதாக பேசிய கேப்டன் பாபர் ஆசாம், அதற்கு முந்தைய தினம் இரவு அறிவித்த போட்டியில் களமிறங்கும் வீரர்கள் பட்டியலை மீண்டும் மாற்றி அறிவித்தார்.

அப்போதே அந்த அணியில் ஏதோ பெரிய குழப்பம் என அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனால், அத்தோடு நிறுத்தாமல் ஏன் அணியை மாற்றுகிறோம் என அவர் சொன்ன காரணம் மிகவும் வேடிக்கையாக, நம்ப முடியாத வகையில் இருந்தது.
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்தது. பாகிஸ்தான் அணி வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் முழுமையாக நம்பின. அதனால் அந்த அணியின் மீது கடும் அழுத்தம் இருந்தது.
ஆனால், போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி பந்தாடியது. 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன் சிறந்த வெற்றியை பதிவு செய்து வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக மாற்றியது.
இந்திய அணியிடம் ஏற்பட்ட தோல்வியை ஒருநாளில் தூக்கிப் போட்டு விட்டு அடுத்து இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு அந்த அணி தயாராகி விடும் என்ற நம்பிக்கை அந்த அணியின் முன்னாள் வீரர்களுக்கே இல்லை. ரமீஸ் ராஜா, சோயப் அக்தர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற தயாராக வேண்டும் என கூறி வந்தனர்.
அதற்கேற்ப, இந்திய அணியில் ஆடிய ஐந்து வீரர்களை நீக்கி, இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு 11 வீரர்கள் கொண்ட புதிய பட்டியலை போட்டிக்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகவே அறிவித்தது பாகிஸ்தான் அணி.
சரி, பாகிஸ்தான் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி விட்டது என அனைவரும் எண்ணிய நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போட்ட பின் அணியை அறிவித்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம், நேற்று இரவு அறிவித்த அணியில் இருந்தே இரண்டு முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக கூறினார்.
முந்தைய நாள் அறிவித்த அணியில் துவக்க வீரர் பாக்கர் ஜமானை நீக்கி இருந்தனர். மிடில் ஆர்டரில் சவுது ஷக்கீல் இடம் பெறுவார் என கூறி இருந்தது. அந்த இருவரையும் தற்போது மாற்றிய பாபர் ஆசாம், அவர்களுக்கு பதில் பாக்கர் ஜமான், அப்துல்லா ஷபிக் அணியில் இடம் பெறுவார்கள் என அறிவித்தார்.
இதற்கான காரணமாக, இமாம் அலிக்கு முதுகு வலி என்றும், சவுது ஷகீலுக்கு காய்ச்சல் எனவும் கூறினார். அந்த நாட்டு ரசிகர்கள் உட்பட பலர் இது நம்பும்படி இல்லை. அணியை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அணிக்குள் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என கூறத் துவங்கி உள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு நீதான் காரணம் என ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கலாம் என ஒரு வதந்தி நிலவுகிறது. ரமீஸ் ராஜா பேசிய போது கூட பாபர் ஆசாம் தோல்விக்கு பொறுப்பேற்காமல் அடுத்தவர்களை கை காட்டக் கூடாது எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.