உலகக்கோப்பை போட்டியை ரத்து செய்த அம்பயர்கள்.. கடுப்பான பாகிஸ்தான் அணி.. என்ன நடந்தது?
பிரிஸ்டல் : பாகிஸ்தான் - இலங்கை இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி மழையால் ஆடுகளம் பாதிக்கப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது.
உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் 11வது போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் சந்திக்கவிருந்தன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லும் என்றே பலரும் கணித்து இருந்தனர்.
இலங்கை அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பதால், எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது பாகிஸ்தான் அணி. ஆனால், போட்டி நடைபெற இருந்த பிரிஸ்டல் நகரில் பெய்த மழை அவர்கள் கனவை கலைத்தது.
மழை பொழிவு
சரியாக போட்டி துவங்க சில மணி நேரம் இருக்கும் போது மழை பெய்யத் துவங்கியது. போட்டியின் மூன்று மணி நேரதிற்கும் மேல் மழை பெய்தது. பின்னர், மழை நின்று, வெயில் அடிக்கத் துவங்கியது. இதனால், போட்டி துவங்கி விடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.

நீர் தேக்கம்
அம்பயர்கள் ஆடுகளத்தை பரிசோதித்தனர். பின்னர், மீண்டும் சில நிமிடங்கள் கழித்து ஆலோசனை செய்தனர். இப்படியே ஒரு மணி நேரத்திற்கும் மேல் சென்றது. ஆடுகளத்தின் பல பகுதிகள் நீர் தேங்காமல் சரியாக இருந்தாலும், ஒரு பகுதியில் மட்டும் நீர் அதிக அளவில் தேங்கி இருந்தது.

வீறு கொண்ட மிக்கி ஆர்தர்
அது தான் நீண்ட நேர விவாதத்திற்கு காரணம். மழை விட்ட பின்பு அந்த பகுதியை பணியாளர்கள் சரி செய்ய முயலவில்லை. மாறாக, அம்பயர்கள் மட்டுமே அது குறித்து விவாதித்து வந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், வீறு கொண்டு ஆடுகளத்துக்குள் நுழைந்து அம்பயர்களிடம் ஏதோ கூறினார்.

தீவிர விவாதம்
அதன் பின்பு, அரைமணி நேரம் கழித்து மூன்று அம்பயர்கள், மேட்ச் ரெப்ரீ ஆகியோர் போட்டியை நடத்தலாமா? வேண்டாமா? என விவாதித்து வந்த போதும் அவர் ஆடுகளத்துக்குள் நுழைந்து அம்பயர்களிடம் பேச முயன்றார். ஆனால், அம்பயர் ஒருவர் அவரை வெளியேறுமாறு கூறினார்.

போட்டி ரத்து
மிக்கி ஆர்தர் வேகமாக உடை மாற்றும் அறைக்கு சென்றார். பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பவுண்டரி எல்லை அருகே கூடி நின்றனர். இதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அம்பயர்கள் மோசமான ஆடுகளத்தை காரணம் காட்டி போட்டியை ரத்து செய்தனர்.
ஒரு புள்ளி
இதனால், பாகிஸ்தான் அணியினர் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணி மூன்றாம் இடத்தையும், இலங்கை அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications