ராவல்பிண்டி: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றிருந்தாலும், களத்தில் ஒரு பெரிய நாடகமே நடந்துள்ளது. பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவும், அதற்கு அடுத்த பந்திலேயே ஷாஹீன் அப்ரிடி செய்த செய்கையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஆனால், இலங்கை இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் நடைபெற்றது.

இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருந்த 19-வது ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். அந்த ஓவரில் தசுன் ஷனகா துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். அப்ரிடி வீசிய ஸ்லோயர் பந்தை ஷனகா பிளிக் செய்ய முயல, பந்து எட்ஜ் ஆகி ஷார்ட் தேர்ட் மேன் திசைக்குச் சென்றது.
வட்டத்திற்குள் நின்றிருந்த பக்கர் ஜமான், பின்னோக்கி ஓடிச் சென்று டைவ் அடித்து அந்தக் கேட்சை பிடித்தார். பார்ப்பதற்கே மிகச்சிறந்த கேட்ச் போல அது தெரிந்தது. ஆனால், கள நடுவர்கள் சந்தேகத்தின் பேரில் மூன்றாவது நடுவரிடம் முறையிட்டனர்.
டிவி ரீப்ளேயில் பார்க்கும்போது, பக்கர் ஜமான் பந்தைப் பிடிக்கும்போது அவரது கைகள் பந்துக்கு அடியில் இருந்தாலும், பந்து தரையில் உரசியது போலத் தெரிந்தது. பல கோணங்களில் ஆராய்ந்த பிறகு, மூன்றாவது நடுவர் ரஷித் ரியாஸ் அது 'நாட்-அவுட்' என்று அறிவித்தார்.
இதைப் பார்த்த பக்கர் ஜமான் அதிர்ச்சியடைந்தார். "நான் பந்தை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன், விரல்கள் பந்துக்கு அடியில் தான் இருந்தது," என்று கள நடுவர்களிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். பாகிஸ்தான் வீரர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நடுவரின் தீர்ப்பால் மைதானத்தில் டென்ஷன் எகிறியது. ஆனால், அந்தச் சர்ச்சை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த பந்திலேயே ஷாஹீன் அப்ரிடி தனது வேலையைக் காட்டினார். மீண்டும் ஒரு ஸ்லோயர் பந்தை வீச, ஷனகா அதைத் தவறவிட்டார். பந்து நேராகச் சென்று லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது.
ஷனகாவை 'கிளீன் போல்ட்' செய்த உற்சாகத்தில் ஷாஹீன் அப்ரிடி மைதானமே அதிரும் வகையில் கத்தினார். அதுமட்டுமின்றி, விக்கெட் விழுந்ததும் மூன்றாவது நடுவரின் அறையை நோக்கி ஆவேசமாக முறைத்துப் பார்த்தார். "இப்போ இதுக்கு என்ன சொல்வீங்க? இதற்கு ரிவ்யூ தேவையா?" என்று கேட்பது போல அவரது செய்கை இருந்தது.
பக்கர் ஜமானும் அந்த விக்கெட் விழுந்ததும் டிவியை நோக்கி சைகை காட்டினார். இந்தச் சம்பவங்கள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இறுதியில் ஷனகா 2 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி போட்டியை எளிதாக வென்றது.