அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இலங்கை அணி தொடரை விட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. இரு அணிகளும் தங்களுடைய முதல் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலை இருந்தது. அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று குசல் பெரேரா, அசலங்கா ஆகியோர் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் கமிண்டு மெண்டீஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ஹசரங்கா 15 ரன்களும், சமீரா கருணரத்னே 17 ரன்கள் எடுக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் சுழற் பந்துவீச்சாளர் அப்ரார் அகமத் நான்கு ஓவர்கள் வீசி வெறும் எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஃபர்கான் அதிரடியாக விளையாட முற்பட்டு 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீக்ஷனா பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான பக்கர் சாமான் 17 ரன்களில் வெளியேற சையிம் அயூப் இரண்டு ரன்களிலும் கேப்டன் சல்மான் ஆகா ஐந்து ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 57 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஆல்ரவுண்டரான உசைன் தலாட் மற்றும் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தனர்.
ஹாரிஸ் பேட்ஸ்மேன் என்பதால் அவர் அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரும் 13 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து மற்றொரு ஆல்ரவுண்டரான முஹமது நவாஸ் களத்திற்கு வந்தார். நவாஸ் மற்றும் தலாக் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
இந்த ஜோடி தங்களது விக்கெட்டை கொடுக்காமல் பவுண்டரி மற்றும் சிங்கிள்ஸ் என அணியின் ஸ்கோர் வேகத்தை நடத்தியது. இறுதியில் நவாஸ் மூன்று சிக்சர் 3 பவுண்டரி என 24 பந்துகளில் 38 ரன்களும் ஹுசைன் தலாட் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க பாகிஸ்தான அணி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்வியிலிருந்து பாகிஸ்தான் மீண்டும் வந்து இருக்கின்றது.