கொழும்பு : இரண்டு வாரம் முன்பு வரை உலகின் வலிமையான ஒருநாள் அணியாக காட்சி அளித்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் உடைந்து போயுள்ளது.
அடுத்து ஆட உள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மொத்தமாக ஐந்து வீரர்களை அணியை விட்டு வெளியேற்றி இருக்கிறது. இத்தனைக்கும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

2௦23 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் முன் வலுவான அணியாக காட்சி அளித்தது. பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரௌப், நசீம் ஷா என மூவர் இணைந்தால் மற்ற அணிகள் மொத்தமாக காலி என அந்த அணியின் முன்னாள் வீரர்கள் செல்லுமிடமெல்லாம் கூறி வந்தார்கள்.
அதே போல, பேட்டிங்கில் பாபர் ஆசாம் உலகிலேயே சிறந்த வீரர். அவர் பாகிஸ்தான் அணியை காப்பாற்றி விடுவார் என்றும் அதிகப்படியாக ஒரே ஒரு நபரைப் பற்றி கூறி வந்தனர். சூப்பர் 4 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் முன்பாகவும் இதே பேச்சுக்கள் வலம் வந்தன.
இந்த நிலையில், இந்திய அணி திட்டம் போட்டு பாகிஸ்தானின் பலத்தை உடைக்க வேண்டும் என முடிவு செய்து, சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை குறி வைத்து ரன் குவித்தது. வெறும் பவுண்டரிகளாக அடித்து அவர்களின் தன்னம்பிக்கையை உடைத்தது.
இந்திய அணி 50 ஒவர்களில் 356 ரன்கள் குவித்ததால், பாகிஸ்தான் அணி நம்பிக்கை இழந்து, அந்தப் போட்டியில் வெறும் 128 ரன்களுக்கு சுருண்டது. பாபர் ஆசாம் உட்பட எந்த பேட்ஸ்மேனும் ரன் சேர்க்கவில்லை. வெற்றிக்காக ஆட வேண்டும் என்ற மனப்பாங்கே அப்போது அவர்களிடம் தென்படவில்லை.
அந்தப் போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் பலமான அணி என்ற பிம்பம் உடைந்தது. மேலும், போட்டியின் போது முக்கிய பந்துவீச்சாளர்கள் ஹாரிஸ் ரௌப், நசீம் ஷா காயமடைந்தனர். அவர்களுக்கு மாற்றாக வேறு வீரர்கள் களமிறங்குவார்கள் என்றும், மற்றபடி அதே அணியுடன் பாகிஸ்தான் இலங்கை அணியை எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது ஐந்து வீரர்களை அணியில் இருந்து நீக்கி இருக்கிறது பாகிஸ்தான். துவக்க வீரர் பாக்கர் ஜமான் கடந்த சில போட்டிகளாக ரன் குவிக்கவில்லை எனக் கூறி அவரை நீக்கி இருக்கிறது. அவருக்கு பதிலாக முஹம்மத் ஹாரிஸ் துவக்க வீரராக களமிறங்க இருக்கிறார்.
ஆல்-ரவுண்டர் சல்மான் ஆகா-வுக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் லேசான காயம் ஏற்பட்டது. அத்துடன் அவர் விளையாட முடியும் என்றாலும், அவரது செயல்பாடும் சரியில்லை எனக் கூறி அவரையும் நீக்கி இருக்கிறது. அவருக்கு பதிலாக டெஸ்ட் அணி வீரர் சௌது ஷகீல் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளார்.

வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் பாஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு, சுழற் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் மட்டுமே ஆடுகளத்தின் தன்மை கருதி செய்யப்பட்டுள்ளது. பாஹீம் அஷ்ரப் இந்திய அணிக்கு எதிராக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த நசீம் ஷா, ஹாரிஸ் ரௌப்புக்கு பதிலாக முகமது வாசிம் ஜூனியர் மற்றும் ஜமான் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்படியாக இந்திய அணிக்கு எதிரான தோல்வி பாதி பாகிஸ்தான் அணியையே மாற்றும் அளவுக்கு சென்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்தால், அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி விவரம் : முகமது ஹாரிஸ், இமாம் உல் ஹக், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சௌது ஷகீல், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஜமான் கான்