கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் முக்கியமான 50வது லீக் போட்டி இன்று பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா சாவா ஆட்டமாகும். இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தியதால் பாகிஸ்தான் அணிக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

டாஸ் வென்ற பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, "நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். இது ஒரு நல்ல ஆடுகளம். போட்டியின் பிற்பகுதியில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. எங்கள் அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும். கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் அடிப்படை விஷயங்களில் தவறு செய்ததால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இன்று மூன்று துறைகளிலும் எங்களது தவறுகளைச் சரிசெய்வோம்.
வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் எப்போதும் எங்களை ஆதரிக்கின்றனர். அதுவே எங்களுக்குப் பெரிய ஊக்கமாக இருக்கிறது. குசால் மெண்டிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கமில் மிஷாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் துஷன் ஹேமந்தாவுக்குப் பதிலாக ஜனித் லியனகே அணியில் இடம் பிடித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசுகையில், "எங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். முதலில் பேட்டிங் செய்து ஒரு நல்ல ஸ்கோரை நிர்ணயித்து, எதிரணியைக் கட்டுப்படுத்த முயற்சிப்போம். சில நேரங்களில் போட்டிகள் கடினமாக அமையலாம், சில நேரங்களில் எளிதாக இருக்கலாம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். எங்கள் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.

பாகிஸ்தான் அணி அரையிறுக்குச் செல்ல நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டை முந்த வேண்டும். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்தால், இலங்கை அணியை குறைந்தது 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். ஒருவேளை 161 ரன்களைத் துரத்தினால், சுமார் 13.2 ஓவர்களிலேயே (40 பந்துகள் மீதமிருக்கையில்) வெற்றி பெற வேண்டும். தற்போது பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதால் 64 ரன்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது.

பாகிஸ்தான் அணி: சஹிப்சாதா ஃபர்ஹான், ஃபக்கர் ஜமான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), கவாஜா நஃபாய், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக்.
இலங்கை அணி: பதும் நிசங்கா, கமில் மிஷாரா (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா, பவன் ரத்னாயகே, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா (கேப்டன்), ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, தில்ஷான் மதுஷங்கா.
பாகிஸ்தான் அணி இமாலய வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குச் செல்லுமா அல்லது இலங்கையிடம் வீழ்ந்து தொடரை விட்டு வெளியேறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.