கராச்சி : ஆசிய கோப்பை தொடருக்கு வரும் போது ராஜாவாக வந்து, இப்போது "கூஜாவாக" பரிதாப நிலையில் இருக்கிறது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அந்த அணிக்கு எச்சரிக்கை ஒன்றை கூறி உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வரலாற்றிலேயே இந்திய அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பதிவு செய்ததே காரணம். அந்த தோல்வியால் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அடுத்த போட்டியில் இலங்கைக்கு எதிராக வென்றால் மட்டுமே அதுவும் நடக்கும்.

கடந்த பத்தாண்டுகளில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மீது தான் அந்த நாடு மிகப்பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தது. எந்த அளவிற்கு என்றால் இதற்கு முன்பெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியாவை வீழ்த்தி விடுங்கள் என்று தான் பாகிஸ்தான் நாட்டு மக்கள் கேட்பார்கள். ஆனால், 2023 ஆசிய கோப்பை தொடரில், பாபர் ஆசாம் அணியை பார்த்து இந்தியா பயந்து, பதறி மோசமான தோல்வியை தழுவப் போகிறது என்றே சமூக ஊடகங்களில் கூறி வந்தனர்.
அதிலும், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சை கண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் அஞ்சி நடுங்குவார்கள் என அந்த அணியின் முன்னாள் வீரர்களே பேசியது தான் இதில் வேடிக்கை.
அப்படி "ஓவர் பில்டப்" கொடுக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவை 356 ரன்கள் அடிக்க விட்டது. அது கூட பரவாயில்லை, ஆனால் பேட்டிங்கில் அதை விட தலைகுப்புற விழுந்து 128 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி உண்மையில் தாங்கள் தான் இந்திய அணியை கண்டு அஞ்சிவிட்டோம் என வாயில் சொல்லாமல் அதை செய்தே காட்டி விட்டனர்.
இந்த நிலையில், அடுத்து இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று அந்த அணிக்கு ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா வழங்கி இருக்கிறது. இதைப் பற்றித் தான் அந்த அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பேசி இருக்கிறார்.
"இலங்கை அணிக்கு எதிராக வென்று இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சிறிய நம்பிக்கையை அளித்துள்ளது. பாகிஸ்தான் அதில் இருந்து பலனடையப் போகிறதா அல்லது இந்திய அணிக்கு எதிரான வீழ்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கப் போகிறதா என பார்க்கலாம். அவர்கள் சிறிது நேரம் இதில் இருந்து விலகி இருக்க வேண்டும். மனதளவில் வேறு ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு ரிசர்வ் நாள் கிடைத்தது. இலங்கை போட்டிக்கு முன் இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. அவர்கள் கிரிக்கெட்டை பற்றியும், தோல்வியை பற்றியும் எண்ணாமல் அமர்ந்து தங்களுக்குள் பேச வேண்டும்" என்றார் ரமீஸ் ராஜா.

மேலும், "யாருக்காவது சிறப்பு பயிற்சி வேண்டுமென்றால் அவர்கள் அதை செய்யலாம். நீச்சல் குளத்துக்கு சென்று ஓய்வெடுக்கலாம். ஆனால், சமூக ஊடகங்களை தொட்டு விடாதீர்கள். தொலைக்காட்சியை பார்க்காதீர்கள். அங்கே எந்த நல்ல விஷயமும் இருக்காது. காரணம், மொத்த பாகிஸ்தானும் உங்கள் மீது ஏமாற்றத்தில் இருக்கிறது. நீங்கள் தோல்விக்கு பின்னர் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறீர்கள். அதுவும் இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகும் அதையே செய்கிறீர்கள். அது நடக்கக் கூடாது" என அவர் அறிவுரை கூறி இருக்கிறார்.
அவரது இந்த பேச்சு பாகிஸ்தானில், அந்த அணி மீது எந்த அளவுக்கு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. இலங்கை அணிக்கு எதிரான போட்டி ஒருவேளை மழையால் தடைபட்டால் நெட் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.