லாகூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான அணி 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் இந்த மோசமான ஆட்டத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு காலத்தில் நம் வீரர்கள் அனைவரும் திறமை வாய்ந்தவர்களாக களத்தில் சிறப்பாக செயல்பட கூடியவர்களாக இருந்தார்கள். நாங்கள் விளையாடும் போது அணியில் உள்ள தனிப்பட்ட நபர்களை நம்பி என்றுமே விளையாடுவதில்லை.
அனைவருமே அணியின் வெற்றிக்காக முக்கிய பங்கு வகிப்போம். யாருமே தப்பித்து விடுவதற்காக வழியை தேடியதே கிடையாது. ஆனால் தற்போது அணியில் உள்ள சூழல் மாறி இருக்கின்றது. கடந்த 10- 15 ஆண்டுகளாக எதுவுமே சரி இல்லை. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் சுயநலத்துடன் விளையாடுகிறார்கள்.
இது தவிர அணிக்காக விளையாடுவது கிடையாது. அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய சராசரி அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர நாட்டுக்காக விளையாடி வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று நினைப்பது கிடையாது. முதலில் பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய இந்த மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் மாறி வருகிறது. நவீன கால கிரிக்கெட் ஏற்ற வகையில் உங்களுடைய போட்டி ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கான வழிவகையை ஏற்படுத்தி விளையாடுங்கள். ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனால் நமது பேட்ஸ்மேன்கள் கடும் சிக்கல்களை சந்திக்கிறார்கள். இதற்காக போகும் இடத்தில் எல்லாம் ராவல்பிண்டி ஆடுகளத்தை எடுத்துக் கொண்டா செல்ல முடியும் என்று சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.