புலவாயோ: ஜிம்பாப்வே அணியிடம் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி 206 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 60 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது மழை பெய்ததால் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றன. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி புலவாயோ நகரில் நடைபெற்றது. முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆன பின் சந்திக்கும் முதல் ஒருநாள் போட்டி என்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 125 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் காராவா பொறுப்பாக விளையாடி ரன் சேர்த்தனர்.
சிக்கந்தர் ராஜா 39 ரன்களும், 9 ஆம் வரிசையில் இறங்கிய காராவா 48 ரன்களும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி 40.2 ஓவர்களில் 205 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணி 206 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால், வரிசையாக அந்த அணி முக்கிய விக்கெட்களை இழந்தது.
துவக்க வீரர்கள் சயீம் அயூப் 11 ரன்களுக்கும், அப்துல்லா ஷபிக் ஒரு ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கம்ரான் குலாம் 17 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆகா சல்மான் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். ஆறாம் வரிசையில் இறங்கிய ஹசீபுல்லா கான் டக் அவுட் ஆனார்.
இர்ஃபான் கான் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கேப்டன் முகமது ரிஸ்வான் தாக்குப்பிடித்து 19 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். பாகிஸ்தான அணி 21 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 60 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தது. அப்போது மழை பெய்ததால் போட்டி நீண்ட நேரம் தடைப்பட்டது.
அதன் பின் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி அதிக விக்கெட்களை இழந்து இருந்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வே 80 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
அதிக வலுவில்லாத ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது. முகமது ரிஸ்வான் கேப்டனான பின் பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்பி விட்டதாக அனைவரும் நினைத்திருந்த நிலையில் இந்தத் தோல்வி கிடைத்து இருக்கிறது.