டெல்லி: ஆசியக் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் நடத்த வேண்டும் என்று இந்தியா கோரும்போது, நாங்களும் உலகக்கோப்பை ஆட்டத்தைல் நடுநிலையான இடத்தில் நடத்த கோரிக்கை வைப்போம் என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மஸாரி தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளன.

இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க அந்நாட்டு அரசு இதுவரை அனுமதியளிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க 11 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சரும் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் எசான் மஸாரி பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் என் அமைச்சரவையின் கீழ் தான் உள்ளது. அந்த வகையில், ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாட இந்திய அணி வருவதற்கு மறுத்து, போட்டிகளை நடுநிலையான மைதானத்தில் நடத்த கோரிக்கை வைத்தது.
அதேபோல் கோரிக்கையை வைக்க எங்களுக்கு உரிமை உள்ளது. உலகக்கோப்பைப் போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி பிரதமருக்கு பரிந்துரைகளை அளிப்போம். அடுத்த வாரத்தில் இந்த சந்திப்பு நடக்கும். பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைத் தொடருக்காக இந்தியா செல்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் தான் எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் அமைச்சரவை குழு பிரதமரை சந்திக்கும் நேரத்தில், தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் பிசிபி தலைவர் சாகா அஷ்ரப் பங்கேற்க உள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற வகையில் ஜெய் ஷாவும் பங்கேற்க உள்ளார். அந்த கூட்டத்தில் தான் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.