லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 2026 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு, அணியின் தேர்வுக் குழுவிற்கும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசனுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. தற்போது மூத்த வீரர்கள் ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் காயம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் தேர்வாளர் ஆக்கிப் ஜாவேத், இதற்கு பயிற்சியாளர் மைக் ஹெசன் தான் பொறுப்பேற்க வேண்டும் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்துப் பேசிய ஆக்கிப் ஜாவேத், "டி20 உலகக்கோப்பையின் போது இவர்களது உடற்தகுதி சரியாகக் கண்காணிக்கப்பட்டதா? உலகக்கோப்பை அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட போது சரியான உடற்தகுதிச் சோதனைகள் நடத்தப்பட்டனவா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. உலகக்கோப்பை தொடரின் இறுதிச் சுற்றான இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர்கள், திடீரென எப்படி காயமடைந்தனர்? இது எப்படி சாத்தியம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு பயிற்சியாளர் மைக் ஹெசன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் முந்தைய தேர்வுக் குழுவினர் மட்டுமே பொறுப்பாவார்கள். ஒரு வீரர் காயமடைந்த நிலையில் இருக்கும்போது, அவரை எப்படி விளையாட அனுமதித்தார்கள்?" என்று சரமாரியாகச் சாடியுள்ளார். உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு மைக் ஹெசனின் அதிகார வரம்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆக்கிப் ஜாவேத்தின் இந்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் தேர்வு முறை குறித்துப் பேசிய ஆக்கிப் ஜாவேத், "ஒரே ஒரு நபர் மட்டும் அணியைத் தேர்வு செய்யவில்லை. தேர்வுக் குழு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் ஆலோசித்தே முடிவுகளை எடுக்கிறோம். வங்கதேசத் தொடரில் சாய்ம் அயூப் மற்றும் உஸ்மான் கான் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் யாரும் நீக்கப்படவில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜாவேத், பாகிஸ்தான் அணியின் செயல்பாடு முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மிகச் சில சிறந்த வெற்றிகளையும், ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக தொடர் வெற்றிகளையும் மட்டுமே பெற்றுள்ளது. மற்றபடி ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகளிடம் படுதோல்விகளை சந்தித்து வருகிறது.