கராச்சி: இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள கவுகாத்தியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான தொடக்க விழாவில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று அந்நாட்டு ஊடகமான ஜியோ சூப்பர் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதட்டங்களின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 2025 மகளிர் உலகக் கோப்பையின் முதல் போட்டிக்கு முன்னதாக, செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் உள்ள டாக்டர் பூபென் ஹசாரிகா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கோலாகலமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பிரபல இந்தியப் பாடகி ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, இது போன்ற தொடக்க விழாக்களில், போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும், செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதும் வழக்கம்.
ஆனால், இந்த விழாவில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா அல்லது பாகிஸ்தான் அணியின் வேறு எந்தப் பிரதிநிதியும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் பதட்டங்கள் காரணமாக, இரு நாடுகளும் 2008-ம் ஆண்டிலிருந்து இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதில்லை. இந்தச் சூழலில், சமீபத்தில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒரு புதிய கொள்கையை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐசிசி நடத்தும் போட்டிகளுக்காக இரு அணிகளும் எல்லை தாண்டிச் செல்லாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே, பாகிஸ்தான் மகளிர் அணி, உலகக் கோப்பையின் தொடக்க விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்துவிட்டது. இதற்குப் பதிலடியாகவே பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த புதிய கொள்கையின்படி, மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது அனைத்து லீக் போட்டிகளையும் இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. ஒருவேளை, பாகிஸ்தான் அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்தப் போட்டிகளும் கொழும்பிலேயே நடைபெறும்.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 2-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 5-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல், ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், தொடக்க விழாவைப் புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவு, உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.