
பாகிஸ்தான் டி20 தொடர்
நேற்று நடைபெற்ற 6வது டி20 போட்டியில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்களை அடித்து வெற்றி கண்டது.

வேடிக்கை நிகழ்வு
பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸில் 6வது ஓவரை ரிச்சர்ட் க்ளீசன் வீச, அதனை ஹைதர் அலி எதிர்கொண்டார். ஷார்ட்டாக வந்த ஒரு பந்தை அலி லெக் திசையில் ஓங்கி மடக்கி அடித்தார். எப்படியும் பவுண்டரிக்கு செல்லும் என அனைவரும் நினைத்த நிலையில், பந்து அங்கு நின்றிருந்த லெக் அம்பயர் அலீம் தாரை நோக்கி சென்றது.

மைதானத்தில் சிரிப்பலை
பந்து தன்னை நோக்கி வருவதை உணர்ந்துக்கொண்ட அலீம் தார், நகர்ந்துக்கொள்ள முற்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக பந்து அவரின் பின் பகுதியில் பட்டது. இதனை மைதானத்தில் பார்த்து வந்த ரசிகர்களிடையே சிரிப்பலை ஏற்பட்டது. முதலில் சிறிய வலியை உணர்ந்த அவர் பின்னர் வழக்கம் போல தனது பணியை தொடர்ந்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
2வது சுவாரஸ்யம்
இந்த போட்டியில் மற்றொரு சுவாரஸ்ய விஷயமும் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியில் அனைத்து வீரர்களும் சொதப்பிய போது, கேப்டன் பாபர் அசாம் மற்றும் 59 பந்துகளில் 87 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் சமன் செய்துக்கொண்டார். கோலி மற்றும் பாபர் அசாம் இருவருமே 81 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











