ஹம்பன்தோட்டா : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதியது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

உலகிலேயே தற்போது பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உடைய அணி என்று பாகிஸ்தானை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அதனை சுக்குநூறாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் உடைத்து விட்டனர். குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குரூபாஸ் 14 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் விளாசி 151 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் இளம் வயதிலேயே 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் சாட்ரன் 80 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியும் நல்ல தொடக்கத்தை அளித்தது. பக்கர் சம்மான் 30 ரன்கள் எடுக்க இமாமுல் ஹக் அபாரமாக விளையாடி 91 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் பாபர் அசாம் 53 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் இரண்டு ரன்களிலும், நடு வரிசையில் ஆக்கா சல்மான் 14 ரன்களிலும், உசாமா மீர் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனையடுத்து இப்திகார் அஹமத் மற்றும் சதாப்கான் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்க ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு விக்கெட் வெற்றிக்கு தேவைப்பட்டது.
அப்போது 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சதாப்கான் எதிர் முனையில் நின்ற போது பந்து வீசும் முன்பே கிரீசை விட்டு நகர்ந்ததால் அவரை ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி மான்கட் செய்து ஆட்டமெலக வைத்தார்.இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆறு பந்துகளுக்கு பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு ஒரு விக்கெட் தான் தேவைப்பட்டது. எனினும் நசீம் ஷா அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரிகளை அடிக்க பாகிஸ்தான் அணி ஒரு பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றியது.