
சமநிலை
முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.

377 ரன்கள் வெற்றி இலக்கு
முதலில் பேட்டிங் செய்த இலங்கை, முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான், தனது முதல் இன்னிங்சில் 215 ரன்களுக்கே சுருண்டது. 63 ரன்கள் முன்னணி பெற்ற இலங்கை, தனது 2வது இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தானுக்கு 377 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கு
இமாலய இலக்குடன், நேற்று தனது 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 7 ஓவர்களிலேயே 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், தொடக்க வீரர் ஷான் மசூத் மற்றும் அனுபவ வீரர் யூனிஸ்கான் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை மீட்டெடுத்தனர்.

சபாஷ் யூனிஸ்கான்
நேற்றைய ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்களை எடுத்திருந்தது. ஷான் மசூத் 114 ரன்களுடனும், யூனிஸ்கான் சதத்தை கடந்தும் களத்தில் நின்றனர். கடைசி நாளான இன்று ஷான் மசூத் 125 ரன்களில் அவுட் ஆன நிலையில், யூனிஸ் கான் நங்கூரம் பாய்ச்சியதை போல களத்தில் நின்று ஆடினார். அவருக்கு கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

சுருட்டியது பாகிஸ்தான்
இதனால் மதிய உணவு இடைவேளை முடிந்த சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 382 ரன்களை குவித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. யூனிஸ்கான் 171 ரன்களுடனும், மிஸ்பா 59 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர்.

தரவரிசை
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான், டெஸ்ட் தர வரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெஸ்ட் போட்டியொன்றில் பாகிஸ்தான் சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சர்வதேச அளவில் ஒரு டெஸ்ட் அணி சேஸ் செய்த 6வது அதிகபட்ச ஸ்கோர் இது. மேலும், 9 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டி தொடரை பாகிஸ்தான் தற்போதுதான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications