கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் வென்று அசத்தியது. சொந்த மண்ணில் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை பாகிஸ்தானிடம் அடுத்தடுத்து இழந்துவிட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது இர்பான் 3 விக்கெட்டுகளையும், அன்வர் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியில் அகமது ஷெஜாத் அதிகபட்சமாக 95 ரன்கள் குவித்தார். ஹபீஸ் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் 41 ஒவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 257 என்ற வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டநாயகனாக அகமது ஷெஜாத் தேர்வு செய்யப்பட்டார். இறுதி போட்டி 26ம் தேதி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியது.