கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதிகபட்சமாக தனஞ்செய்ய டி செல்வா 57 ரன்களும், தினேஷ் சந்திமால் 34 ரன்களும் எடுக்க இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இதேபோன்று ஆகா சல்மான் 132 ரன்கள் குவிக்க ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகில் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 576 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. 410 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இதில் தொடக்க வீரர் நிஷான் மதுஷ்கா 33 ரன்களும், கேப்டன் கருணரத்னே 41 ரன்களும் எடுக்க அந்த அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்தீவ்ஸ் அரை சதம் கடந்தார். எனினும் மற்ற வீரர்கள் யாரும் களத்தில் கொஞ்சம் நேரம் கூட நிற்கவில்லை. குறிப்பாக இலங்கை அணியின் பின்வரிசை வீரர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 67.4 ஓவர்களில் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் பாகிஸ்தான் வீரர் ரோமன் அலி ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இளம் வீரர் நசீம் ஷா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்றதோடு இலங்கை மண்ணில் அதிக முறை டெஸ்ட் தொடரை வென்ற அணி என்ற சாதனையையும் பாகிஸ்தான் படைத்திருக்கிறது. இதுவரை இலங்கை மண்ணில் பாகிஸ்தான் ஐந்து முறை டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது.