முல்தான் : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் வென்றது. முல்தானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் பக்கார் ஷமான் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உஙல ஹக், பாபர் அசாம் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இமாம் உல் ஹக் 72 ரன்களும், பாபர் அசாம் 77 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். இதே போன்று ரிஸ்வான் 15 ரன்களுக்கு வெளியேறினார். ஹாரிஸ், நவாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதன் பின்னர் இறுதியில் ஷதாப் கான், ஷா ஆகியோர் தலா 22 ரன்களுக்கு வெளியேறினர்.
இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது.
இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான் பேட்டிங் செய்த போது திடீரென்று மைதானத்துக்கு பார்வையாளர் ஒருவர் ஓடி வந்தார். இதனை பார்த்ததும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திகைத்து போனார்கள். ஆனால் அந்த வீரர் ஷதாப் கான் முன் நின்று சல்யூட் அடித்தார். இதனை கண்டதும், ஷதாப் கான் அந்த ரசிகரை கட்டி அணைத்தார்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.