
தொடர் வெற்றிகள்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் போட்டியிலே இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. இதன் பின்னர் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் என அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை பெற்று யாராலும் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது.

முக்கிய போட்டி
இந்நிலையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் போட்டியாக நேற்று நமிபியா அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 49 பந்துகளில் 70 ரன்களை விளாசினார். மறுமுனையில் உறுதுணையாக நின்ற முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மீண்டும் வெற்றி
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணியும் தொடக்கத்தில் சிறப்பாக ஆடியது. ஆனால் சீரான வேகத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக கிரேக் வில்லியம்ஸ் 40 ரன்களும், ஸ்டீபன் பார்டு 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இறுதியில், நமீபியா 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு தேர்வு
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் கெத்தாக நுழைந்தது. அமீரக களத்தில் பாகிஸ்தான் அணி மிகவும் பலமாக உள்ளது. சொந்த மண்ணில் அரசியல் மற்றும் சர்வதேச பிரச்னைகள் இருப்பதால், பல்வேறு சர்வதேச தொடர்களை அமீரகத்தில் தான் பாகிஸ்தான் விளையாடியுள்ளது. எனவே அனுபவமான களம் என்பதால் அனைத்து அணிகளையும் வீழ்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











