லாகூர்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹன்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரார் அஹ்மதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி தேர்வு செய்ததற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் பெறும் ஊதியம், இந்தியாவின் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மறைமுகமாகப் பங்களிப்பதாக அவர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார்.
ஒரு இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மதுவை ஏலத்தில் எடுத்தது கவாஸ்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதைத் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக, புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், இந்திய அணிகள் சர்வதேசப் போட்டிகளிலும்கூட பாகிஸ்தான் வீரர்களுடன் பழகுவதைத் தவிர்த்து வருகின்றன.

தனது கட்டுரையில் கவாஸ்கர், பாகிஸ்தான் வீரர்களுக்குச் செலுத்தப்படும் ஊதியத்தின் ஒரு பகுதி அவர்கள் அரசிற்குச் செலுத்தும் வருமான வரி வழியாக அந்நாட்டு அரசு ஆயுதங்கள் வாங்கப் பயன்படுவதால், அது மறைமுகமாக இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுக்கிறது என்று வாதிட்டார்.

மேலும், "இந்திய நிறுவனமோ அல்லது அதன் வெளிநாட்டுப் பிரிவோ பணம் செலுத்தினாலும், உரிமையாளர் இந்தியராக இருந்தால், அவர் இந்திய உயிரிழப்புகளுக்குப் பங்களிக்கிறார்," என கவாஸ்கர் அழுத்தமாக கூறினார். சன்ரைசர்ஸ் போட்டிகளை இந்திய ரசிகர்கள் புறக்கணிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே, கராச்சியைச் சேர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அஸீம் ரஃபிக், கவாஸ்கரின் கருத்துகளை 'அபத்தமானது' மற்றும் 'அருவருப்பானது' என்று கடுமையாக விமர்சித்தார். தனது X தளத்தில் அவர், "இது முற்றிலும் அபத்தமானது, கண்டிக்கப்பட வேண்டும். இத்தகைய கருத்துகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன? நீங்கள் எத்தனை ரன்கள் அடித்தீர்கள் என்பது எனக்குக் கவலையில்லை. கவாஸ்கரிடமிருந்து அருவருப்பான விஷயம் இது," என்று பதிவிட்டுள்ளார்.

அப்ராரை வாங்குவதற்கு அதிகாரிகள் முன்வந்தபோது, அணி உரிமையாளர்கள் தலையிட்டு அந்த முடிவைத் தடுத்திருக்க வேண்டும் என்று கவாஸ்கர் சன்ரைசர்ஸ் நிர்வாகிகளை விமர்சித்தார். "வேறு எந்த நாடும் விளையாடாத ஒரு போட்டி வடிவத்தில் கோப்பையை வெல்வது, இந்தியர்களின் உயிரைவிட முக்கியமானதா?" என தனது கட்டுரையில் அவர் கேள்வி எழுப்பினார்.