இஸ்லாமாபாத்: சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆசிய கோப்பையின் நாயகனும், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனுமான இந்தியாவின் அபிஷேக் சர்மாவை, பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் இஹ்சானுல்லா சீண்டி இருக்கிறார். தன் பந்துவீச்சில் அபிஷேக் சர்மா மூன்று பந்துகள் கூட தாங்கமாட்டார் என கூறி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பைத் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் பஞ்சாப்பைச் சேர்ந்த 25 வயது அதிரடி வீரர் அபிஷேக் சர்மா. அந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர், 3 அரைசதங்களுடன் 314 ரன்களைக் குவித்தார். அதைவிட முக்கியமாக, அவரது ஸ்ட்ரைக் ரேட் சுமார் 200 ஆக இருந்தது, எதிரணி பந்துவீச்சாளர்களை அவர் எந்த அளவிற்குத் திணறடித்தார் என்பதற்குச் சான்றாகும்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2023 தொடரில், 152.65 கிமீ வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இஹ்சானுல்லா. அந்தத் தொடரில் காட்டிய அபாரத் திறமையால், பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், காயம் காரணமாக தற்போது அவர் அணியிலிருந்து வெளியேறி, சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய இஹ்சானுல்லா, அபிஷேக் சர்மாவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். "எனக்கு இந்தியாவுக்கு எதிராக விளையாட வாய்ப்புக் கிடைத்தால், அபிஷேக் சர்மாவை 3 முதல் 6 பந்துகளுக்குள் நான் ஆட்டமிழக்கச் செய்துவிடுவேன்" என்று அவர் ஆணவத்துடன் கூறியுள்ளார்.
காயத்தால் அணியில் கூட இல்லாத ஒரு வீரர், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனுக்கு இப்படி ஒரு சவால் விடுத்தது, சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. "முதலில் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்புவதைப் பாருங்கள், பிறகு சவால் விடலாம்." என்றும், "உலகின் நம்பர் 1 வீரரை, அணியில் இடமில்லாத ஒருவர் விமர்சிப்பதா?" என்றும் பலரும் இஹ்சானுல்லாவை கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
இஹ்சானுல்லாவின் ஆணவமான பேச்சுக்கு நேர்மாறாக, அபிஷேக் சர்மாவின் பயணம் கடின உழைப்பும், பொறுமையும் நிறைந்தது. 2018-ல் பிரித்வி ஷா தலைமையில் அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அவரது சக வீரர்கள் உடனே சீனியர் அணிக்குத் தேர்வானபோதும், அபிஷேக்குக்கு வாய்ப்பு கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது.
இதுகுறித்து அவர் தனது முதிர்ச்சியான கருத்தைப் பதிவு செய்துள்ளார். "சிலர் நேரடியாக 'லிஃப்ட்' மூலம் மேலே வந்துவிடுவார்கள். சிலர் ஒவ்வொரு படியாக 'படிக்கட்டில்' ஏறி வர வேண்டும். நான் படிக்கட்டில் வந்ததை ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். ஏனென்றால், நான் நேரடியாக அணிக்குள் வந்திருந்தால், கடந்த சில ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட பல விஷயங்களைக் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காது" என்று அவர் தெரிவித்துள்ளார்.