“3 பந்து போட்டதே போதும் கிளம்புங்க”.. ஆஸ்திரேலியாவில் அவமானப்பட்ட பாக். பவுலர் ஷஹீன் அப்ரிடி
பிரிஸ்பேன்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடிக்கு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL) தொடரின் அறிமுகப் போட்டியே ஒரு கெட்ட கனவாக முடிந்துள்ளது. தொடர்ந்து ஆபத்தான பந்துகளை வீசியதால், ஒரு ஓவரை கூட முழுமையாக வீச விடாமல் நடுவர்கள் அவரைப் பாதியிலேயே பந்துவீச்சிலிருந்து நீக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற உள்ளூர் டி20 தொடரான பிபிஎல் 2025 தொடரில், பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) அணிக்காக ஷஹீன் அப்ரிடி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மிகுந்த எதிர்பார்ப்புடன் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிக்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை) அவர் களமிறங்கினார்.

நடுவரின் அதிரடி உத்தரவு
தனது வேகத்தால் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்ரிடி, தனது கட்டுப்பாட்டை இழந்து தவித்தார். போட்டியின் போது அவர் வீசிய 3-வது ஓவரில் அந்த சம்பவம் அரங்கேறியது. அந்த ஓவரில் முதலில் ஃபீல்டிங் விதிமுறை மீறலால் ஒரு 'நோ-பால்' வீசினார். அடுத்ததாக, பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே ஆபத்தான வகையில் ஒரு 'ஃபுல் டாஸ்' வீசினார். இதுவும் நோ-பால் ஆனது. சிறிது இடைவெளிக்குப்பின், மீண்டும் அதே ஓவரில் மற்றொரு ஆபத்தான 'பீமர்' பந்தை வீசினார்.
கிரிக்கெட் விதிமுறைப்படி, ஒரு பந்துவீச்சாளர் ஒரே இன்னிங்ஸில் இரண்டு முறை ஆபத்தான பீமர் பந்துகளை வீசினால், அவர் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்பட மாட்டார். இதனால் பொறுமை இழந்த நடுவர்கள், ஷஹீன் அப்ரிடியை அந்த ஓவரின் பாதியிலேயே தடுத்து நிறுத்தி, "நீங்க பந்துவீசியது போதும், இனி பந்துவீச முடியாது" என்று கூறி பந்துவீச்சிலிருந்து நீக்கினர்.
மோசமான சாதனை
இதன் காரணமாக அவர் தனது 3-வது ஓவரை 2.4 ஓவர்களிலேயே முடிக்க வேண்டியதாயிற்று. அந்த ஓவரில் மட்டும் அவர் 3 நோ-பால்களை வீசிச் சொதப்பினார். விதிமுறை மீறல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவரது பந்துவீச்சை மெல்போர்ன் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். குறிப்பாக டிம் சீஃபெர்ட் அப்ரிடியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
மொத்தமாக 2.4 ஓவர்கள் மட்டுமே வீசிய ஷஹீன் அப்ரிடி, விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 43 ரன்களை வாரி வழங்கினார். அவரது எகானமி ரேட் 16.13 ஆக இருந்தது. பிரிஸ்பேன் ஹீட் அணியின் முக்கிய பந்துவீச்சாளராகக் கருதப்பட்ட அவர், இப்படிச் சொதப்பியது அணிக்குப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் சோபிக்கத் தவறிய நிலையில், தற்போது ஷஹீன் அப்ரிடியும் அவமானத்தைச் சந்தித்துள்ளார்.


Click it and Unblock the Notifications