அகமதாபாத்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி விக்கெட்டுக்காக பந்துவீசாமல், பும்ராவை போல் அடிப்படைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வாசிம் அக்ரம் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது.

ஆனால் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி பவுலர்களின் செயல்பாடுகள் சுமாராகவே இருந்தது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர பவுலர் ஷாகின் அப்ரிடி 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரன்களை விட்டுக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து போட்டிகளில் திணறி வருகிறார்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பேசுகையில், ஷாகின் அப்ரிடி ஃபிட்னஸில் ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் ஒழுக்கம் தான் மிஸ் ஆகிறது. விக்கெட்டுக்காக அதிகமாக முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறையும் யார்க்கரை மட்டுமே வீச முயற்சிப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. அப்படி யார்க்கரை வீச முயற்சிக்கும் போது பேட்ஸ்மேன்கள் தயாராக இருப்பார்கள்.
இந்திய அணியின் பும்ரா ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு முயற்சிக்காமல், அழுத்தத்தை அதிகரிக்கிறார். சரியான ஆஃப் ஸ்டம்புக்கு மேல் தனது லைனை வைத்திருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி அழுத்தம் கொடுத்ததோடு, விக்கெட்டுகளையும் சாய்த்தார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷாவை அந்த அணி அதிகமாக மிஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் நசீன் ஷா ரன்களை அதிகமாக விட்டுக் கொடுக்காமல் பந்துவீசி அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவர். நசீம் ஷா ஒரு முனையில் இருந்து அழுத்தம் கொடுக்கும் போது, மற்றவர்களை அட்டாக் செய்ய முயன்று பேட்ஸ்மேன்கள் விக்கெட் கொடுப்பார்கள். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களால் அடிப்படைகளை கூட சரியான பின்பற்ற முடியவில்லை. அதுதான் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சொதப்புவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.