லாகூர்: வங்கதேசத்திற்கு ஆதரவாக 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரையோ அல்லது இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியையோ புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டி வருகிறது. ஆனால், அப்படி ஒரு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் வாரியம் மிகப்பெரிய சட்டச் சிக்கலையும், பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்குத் தான் உலகளவில் மவுசு அதிகம். இந்தப் போட்டியின் மூலம் தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் இந்த ஒரு போட்டியை வைத்து மட்டும் சுமார் 38 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 315 கோடி ரூபாய்) வருவாய் ஈட்ட முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட மறுத்தால், இந்த வருமானம் பாதிக்கப்படும். இதனால் ஒளிபரப்பு நிறுவனம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்து, நஷ்ட ஈடு கோர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் வாரியத்தால் இந்தத் தொகையைச் சமாளிக்க முடியாது.
ஐசிசி நடத்தும் தொடர்களில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பாகிஸ்தான் வாரியமும் இதில் கையெழுத்திட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுபடியாகும் ஒரு ஆவணமாகும். இந்த ஒப்பந்தத்தை மீறித் தொடரைப் புறக்கணித்தாலோ அல்லது குறிப்பிட்ட போட்டியில் விளையாட மறுத்தாலோ, ஐசிசி கடுமையான தடைகளை விதிக்கும். மேலும் சட்டரீதியான நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். வங்கதேச விவகாரம் குறித்தும், உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நக்வி, "பிரதமருடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து முடிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த இறுதி முடிவு வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். வெறும் அரசியல் காரணங்களுக்காக உலகக்கோப்பையைப் புறக்கணித்தால், அது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்குத் தான் அழிவை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.