மும்பை: 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அதன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், கொழும்பில் பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிராக விளையாட அந்த அணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், உலககோப்பை தொடரில் ஒரு நாடு மற்ற நாட்டுக்கு எதிராக விளையாடாமல் போட்டியை புறக்கணிப்பது இது முதல் முறை அல்ல.
இந்த போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், சர்வதேச கிரிக்கெட் அணி ஒன்று உலகக் கோப்பை போட்டியில் விளையாட மறுக்கும் ஐந்தாவது நிகழ்வாக இது அமையும். இதற்கு முன் நடந்த சில முக்கிய புறக்கணிப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1996 உலகக் கோப்பை – இலங்கை vs ஆஸ்திரேலியா:
1996 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு சில வாரங்களுக்கு முன், இலங்கையில் நடந்த ஒரு தீவிரவாத தாக்குதல் பெரிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது. ஜனவரி 31 அன்று கொழும்பில் மத்திய வங்கி அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரக் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்தனர்.
இலங்கையில் பல உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்ததால், வெளிநாட்டு அணிகள் தங்கள் பாதுகாப்பு குறித்து அஞ்சின. பாதுகாப்பு உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்திரேலியா கொழும்புக்கு வர மறுத்தது.இதன் விளைவாக, இலங்கைக்கு 'வாக்ஓவர்' வெற்றி வழங்கப்பட்டு, போட்டியில் முக்கியமான புள்ளிகளைப் பெற்றது.
1996 உலகக் கோப்பை – இலங்கை vs மேற்கிந்தியத் தீவுகள்:
இதேபோல், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி இலங்கையில் நடைபெறவிருந்த தங்களது போட்டியில் விளையாட மறுத்தது. ஐசிசி அதிகபட்ச பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்த போதும், நாடு பாதுகாப்பானது என்று அறிவித்த போதிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி பயணிக்கவில்லை. இலங்கைக்கு மற்றொரு வாக்ஓவர் வெற்றி கிடைத்தது. ஆனால், விளையாட மறுத்ததற்காக ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் கிரிக்கெட் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
2003 உலகக் கோப்பை – ஜிம்பாப்வே vs இங்கிலாந்து:
2003 உலகக் கோப்பையின் போது, ராபர்ட் முகாபே ஆட்சியின் கீழ் ஜிம்பாப்வே அரசியல் குழப்பத்தில் சிக்கியிருந்தது. பாதுகாப்பு மற்றும் அரசியல் கவலைகள் காரணமாக இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேக்கு செல்ல வேண்டாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் அறிவுறுத்தினார்.போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், ஐசிசி அதை மறுத்தது. இதனால், ஜிம்பாப்வேக்கு வாக்ஓவர் மற்றும் நான்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே அடுத்த சுற்றுக்கு முன்னேறியதால், இந்த முடிவு இங்கிலாந்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
2003 உலகக் கோப்பை – கென்யா vs நியூசிலாந்து:
அதே உலகக் கோப்பைத் தொடரில், நியூசிலாந்து அணியும் பாதுகாப்புச் சிக்கல்களை எதிர்கொண்டு கென்யாவுக்குச் செல்ல மறுத்தது. நிலைமையை ஆராய்ந்து, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, அபாயங்கள் மிக அதிகம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதன் விளைவாக, கென்யாவுக்குப் போட்டிப் புள்ளிகள் வழங்கப்பட்டன.இந்த புள்ளிகள் கென்யா அணி வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதிக்கு முன்னேற பெரிதும் உதவின.