
புலவாயோ:ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் 67 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான், 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரி்க்கெட் அணி ஜிம்பாப்வேயில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 201 ரன்களிலும், 2வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

இன்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே, 25.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சானு சிபாபா அதிகபட்சமாக 16 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வேயின் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
பாகிஸ்தானின் பஹீம் அஷ்ரப் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 69 ரன்கள் எடுத்து வென்றது. பகர் ஜமான் 43, பாபர் அசாம் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.