பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கி 3 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. மேலும் 3 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. முதல் போட்டி மான்செஸ்டரிலும், தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகள் சௌதாம்டனில் 13 -17 மற்றும் 21 -25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதேபோல ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிசிபி அறிவிப்பு
ஆகஸ்ட்டில் துவங்கவுள்ள இந்த போட்டிகளில் மோதும்வகையில் முன்னதாக லாகூரின் ஈஸ்டர்ன் சிட்டியில் பயிற்சி ஆட்டங்களை நடத்தவும் பிசிபி திட்டமிட்டிருந்தது. மிகுந்த கண்காணிப்புக்கிடையில் இந்த பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நாட்டில் சமீப வாரங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளை அடுத்து இந்த பயிற்சி ஆட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிபி அறிவித்துள்ளது.
பரிதவிப்பில் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு லட்சத்தை தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள அங்குள்ள மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பை கரருத்தில் கொண்டு பயிற்சி ஆட்டங்களை ரத்து செய்துள்ள பிசிபி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு
பிசிபி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து, தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும், போட்டி துவங்குவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே அதாவது ஜூலை துவக்கத்திலேயே பாகிஸ்தான் வீரர்களை இங்கிலாந்திற்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிபி தெரிவித்துள்ளது. இதன்மூலம் குவாரன்டைன் காலத்தை கழிப்பது மற்றும் கூடுதலாக பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.